திருத்துறைப்பூண்டி, ஜன.10: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கின் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன். களியக்காவிளை - கேரளா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அணுகுசாலை சோதனை சாவடியில் நேற்றிரவு பணியில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், வில்சனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதற்கு காரணமானவர்களை உடனே காவல்துறை கைது செய்ய வேண்டும்.
இவரை மனிதாபிமானமின்றி கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இனி இந்த தவறுகள் செய்யக்கூடியவர்கள் அச்சப்படும் அளவிற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகளை போல் துப்பாக்கி கலாச்சாரத்தை இந்திய நாட்டில் ஆரம்பிக்க நினைக்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்றார்.